சிவகாமியின் சபத வாதாபி – 1500 ஆண்டு பழமையான கலை அதிசயங்கள்

Must Read

சிவகாமியின் சபதத்தில் வரும் வாதாபி – 1500 ஆண்டு பழமையான சாளுக்கிய கலை அதிசயங்கள் | Badami, Aihole, Pattadakal பயணம் – பகுதி 1

பல நாட்களாக என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த இந்தத் தொடரை எழுத இப்போதுதான் நேரம் வாய்த்தது. கல்கியின் சிவகாமியின் சபதம் வாசித்த எவருக்கும் வாதாபி எனப்படும் பாதாமி ஒரு தீராத கனவுத் தேசம். அந்த நாவலில் வரும் பல்லவ மாமன்னன் நரசிம்மவர்மன் (மாமல்லன்), வாதாபியின் மீது போர் தொடுத்து, அந்நகரை அழித்து, தனது வெற்றிக் கல்வெட்டைப் பொறித்து வந்த வரலாற்றுச் சுவடுகளைக் காண்பதுதான் எங்களின் முதன்மை நோக்கமாக இருந்தது.

அன்று கி.பி. 642-ல் வாதாபியின் வீதிகளில் போர் மேகங்கள் சூழ்ந்திருந்தபோது, யானைகளின் பிளிறலும், வாள்களின் மோதலும், வீரர்களின் மரண ஓலமும் அந்த செந்நிறப் பாறைகளில் எதிரொலித்திருக்கக்கூடும். சாளுக்கிய மாமன்னன் இரண்டாம் புலிகேசியை வீழ்த்திய மாமல்லன், தனது வெற்றியைப் பதிவு செய்த கல்வெட்டு இன்றும் பாதாமி அருங்காட்சியகம் அருகிலுள்ள பாறையில் காலத்தை வென்று கம்பீரமாக நிற்கிறது. ஒரு பேரரசின் வீழ்ச்சியும், ஒரு நகரின் சிதைவும் வரலாற்றின் கோரமான பக்கங்கள். ஆனால், இந்த அழிவின் சுவடுகளுக்குப் பின்னால் ஒரு மாபெரும் நிர்மாணத்தின் வரலாறு ஒளிந்திருக்கிறது.

பல்லவர்கள் வாதாபியைச் சிதைப்பதற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பே, கி.பி. 543-544 காலக்கட்டத்தில் ஆரம்பகால சாளுக்கிய வம்சத்தை நிறுவிய முதலாம் புலிகேசி, இந்தப் பாறைகளின் மேல் வலிமையான கோட்டையை அமைத்தார். வாதாபி நகருக்கு மேலே உள்ள மலையில் அவர் கோட்டை அமைத்ததை உறுதிப்படுத்தும் கல்வெட்டு இன்றும் அங்குள்ள ஒரு பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது (அந்தக் கல்வெட்டின் முழுமையான வாசகம் வரலாற்றுப் புத்தகங்களில் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றாலும், கோட்டை அமைக்கப்பட்ட ஆண்டான 543-544 என்பதை அது உறுதியாகப் பதிவு செய்துள்ளது).

அசுவமேதம் உள்ளிட்ட யாகங்களைச் செய்து அவர் தங்களது சுதந்திர ஆட்சியைப் பிரகடனப்படுத்தினார். மூன்று பக்கமும் செங்குத்தான செம்மணற்கல் பாறைகளால் சூழப்பட்ட இந்த இயற்கையான பாதுகாப்பே வாதாபியை அவர்களின் தலைநகராக மாற்றத் தூண்டியது. அழிவுகளையும் தாண்டி இன்றும் கம்பீரமாக நிற்கும் சாளுக்கியர்களின் குடைவரைகளும் கோயில்களும், காலத்தை வென்ற அவர்களின் கலை தாகத்திற்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.

வரலாற்றுத் தேடலும் மழையின் சாரலும்!

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆவணம் கருத்தரங்கம் இனிதே முடிவடைந்த கையோடு, எங்களின் இந்த வரலாற்றுப் பயணம் தொடங்கியது. நானும் எனது நண்பர் திரு. முருகன் நடராஜன் அவர்களும் இணைந்து மேற்கொண்ட மூன்று நாள் தேடல் இது. இந்தப் பயணத்துக்கான முழுத் திட்டமிடலும் நண்பர் முருகன் நடராஜனுடையது தான். எங்கு செல்ல வேண்டும், என்னென்ன கல்வெட்டுகளைப் பார்க்க வேண்டும் என அனைத்தையும் மிகத் துல்லியமாக அவர் திட்டமிட்டிருந்தார்.

பயணத்திற்கு முன்பே, அந்த இடங்களைப் பற்றிய முழுமையான வரலாற்றுத் தகவல்களைப் படித்துவிட்டுச் சென்றது, இந்தப் பயணத்தை வெறும் சுற்றுலாவாக அல்லாமல் ஒரு ஆழ்ந்த வரலாற்றுத் தேடலாக மாற்றியது. பெங்களூரிலிருந்து இரவு ரயிலில் ஏறி, அதிகாலை 6 மணிக்கெல்லாம் பாதாமி ரயில் நிலையத்தை வந்தடைந்தோம். நாங்கள் சென்ற ஜூலை மாதம் நல்ல மழைக்காலம். மழையில் நனைந்தபடி வாதாபியின் மண்ணில் கால் பதித்தபோது, அங்கிருந்த குடைவரைகளும் கோயில்களும் சொல்ல முடியாத பேரழகோடு காட்சியளித்தன.

மல்பிரபா நதிப் பள்ளத்தாக்கின் செம்மணற்கல் பாறைகளும், கண்கவர் பள்ளத்தாக்குகளும் மழையில் நனைந்து ஜொலித்தன. சாளுக்கியப் பேரரசின் சுவடுகள் மழையின் சாரலில் மேலும் மிளிர்ந்தன. பாதாமியின் உண்மையான அழகை முழுமையாக ரசிக்க வேண்டும் என்றால், கண்டிப்பாக ஒரு மழைக்காலத்தில் தான் செல்ல வேண்டும்.

மல்பிரபா பள்ளத்தாக்கும் மேகுடி மலையின் பெருங்கற்கால சின்னங்களும்

ஐஹொளே பற்றிய பயணக்கட்டுரைக்குள் நுழைவதற்கு முன்பு, அங்குள்ள பழங்கால சின்னங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இதோ. கர்நாடகாவில் உள்ள ஆரம்பகால சாளுக்கியர்களின் ராஜ்ஜியம் முக்கியமாக ஒரு பள்ளத்தாக்கிற்குள் அடங்கியுள்ளது. இது அதன் அகலமான பகுதியில் 8 கிலோமீட்டர் அகலத்திற்கும் சற்றே அதிகமாகவும், சுமார் 25 கிலோமீட்டர் நீளமும் கொண்டது. இதன் வழியாக மல்பிரபா நதி வடகிழக்கு திசையில் பாய்கிறது.

இந்த பள்ளத்தாக்கு செம்மணற்கல் பாறைகளால் சூழப்பட்டுள்ளது, இவற்றில் சில வியக்கத்தக்க செங்குத்துப் பாறைகள் மற்றும் அற்புதமான பள்ளத்தாக்குகளைக் கொண்டுள்ளன. இந்த தனிமையான பகுதி இன்று செழிப்பான நீர்ப்பாசன வசதியைக் கொண்டுள்ளது. ஒரு காலத்தில் தக்காணத்தின் பெரும்பகுதி வரை விரிவடைந்திருந்த ஒரு ராஜ்ஜியத்தின் மையமாக இது செயல்பட்டதால், இது அதிக மக்கள் தொகை கொண்டதாக இருந்திருக்க வேண்டும்.

ஏராளமான நீர் விநியோகத்துடன், கரடுமுரடான பாறைகளால் சூழப்பட்டுள்ளதால் மல்பிரபா பள்ளத்தாக்கு இயற்கையான பாதுகாப்பையும் பெறுகிறது. ஆரம்பகால சாளுக்கியர்களும், அவர்களின் வாரிசுகளும் இதை நன்கு உணர்ந்திருந்தனர். அவர்கள் பாறைகளின் ஓரங்களில் பாதுகாப்பு கோட்டை சுவர்கள், கொத்தளங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை அமைத்தனர். போர்களும் படையெடுப்புகளும் நீண்ட காலத்திற்கு முன்பே கடந்துவிட்டன, மல்பிரபா பள்ளத்தாக்கு இப்போது அதன் தனிமையான சூழ்நிலையால் அதிக அழகைப் பெறும் ஒரு அமைதியான, கிராமப்புறப் பகுதியாக உள்ளது.

நதி மற்றும் சுற்றியுள்ள பாறைகளின் இயற்கையான குகைகள், பாறை ஓவியங்கள் எனப் பழங்காலம் முதலே மல்பிரபா பள்ளத்தாக்கு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததில் ஆச்சரியமில்லை. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஏராளமான வரலாற்றுக்கு முந்தைய எச்சங்கள் (Prehistoric Remains) இதனை உறுதிப்படுத்துகின்றன. இவை டால்மென்கள் (Dolmens) எனப்படும் கல் அடக்க அமைப்புகளாகவும் (கல்பதுக்கைகள்), இயற்கையான பாறை குகைகளின் பரப்புகளில் வரையப்பட்ட அல்லது கொத்தப்பட்ட விலங்குகள், பறவைகள் மற்றும் மனித உருவங்களாகவும் உள்ளன. இந்த அடக்கங்கள், ஓவியங்கள் மற்றும் சித்திரங்களின் காலக்கட்டம் பழங்கற்காலம் (Palaeolithic), நுண்கற்காலம் (Microlithic) மற்றும் பெருங்கற்காலம் (Megalithic) சார்ந்தது.

மேகுடி மலையில் உள்ள பெருங்கற்கால சின்னங்கள் (டால்மென்கள்): ஐஹொளேயில் உள்ள மேகுடி மலையின் உச்சிப் பகுதியில் சுவர்களுக்கு அப்பால் உள்ள பாறைகள் நிறைந்த இடத்தில், ஏராளமான டால்மென்களைக் (கல்பதுக்கைகள்) காண முடியும், அவற்றில் பல இப்போது இடிந்து கிடக்கின்றன. ஒப்பீட்டளவில் முழுமையான நிலையில் எஞ்சியிருப்பவை நான்கு செங்குத்தான கல் பலகைகளைக் கொண்டு ஒரு நாற்கர அறையை உருவாக்குகின்றன, அவற்றின் மேல் மிகப் பெரிய, வடிவம் இல்லாத கிடைமட்ட கல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

சங்கமிக்கும் வழிபாட்டு மரபுகள்

இந்த மூன்று நாள் பயணத்தில் நாங்கள் காணவிருக்கும் கலைப் பொக்கிஷங்களின் பெயர்களை நினைத்தாலே நெஞ்சம் இனிக்கிறது. சாளுக்கியர்களின் இந்தத் தலைநகரங்களில் ஒரு மாபெரும் பேரரசு எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கும் மட்டும் தங்களைச் சுருக்கிக் கொள்ளாமல், சைவம், வைணவம், சமணம், பௌத்தம், சௌரம் (சூரிய வழிபாடு), சாக்தம் (அம்மன் வழிபாடு) எனப் பல்வேறு வழிபாட்டு மரபுகளுக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளது. வரும் நாட்களில் நாங்கள் விரிவாகப் பார்க்கவிருக்கும் இடங்கள்:

பாதாமியில்: செங்குத்தான பாறைகளில் குடையப்பட்டுள்ள நான்கு மாபெரும் குடைவரைகளில் மத நல்லிணக்கம் மிளிர்கிறது. சிவன் நடராஜராக வீற்றிருக்கும் முதலாம் குடைவரை சைவ மரபிற்கும், விஷ்ணுவுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் குடைவரைகள் வைணவ மரபிற்கும், நான்காம் குடைவரை சமண மரபிற்கும் உரியவை. மேலும் அகஸ்திய தீர்த்தக் குளக்கரையில் அமைந்திருக்கும் பூதநாதர் கோயில், மலைக்கட்டி சிவாலயம், மேல் சிவாலயம் மற்றும் கீழ் சிவாலயம் ஆகியவை சைவ மற்றும் வைணவக் கூறுகளைக் கொண்டுள்ளன.

ஐஹொளேயில்: இந்தியக் கோயில் கட்டிடக்கலையின் தொட்டிலான இங்கு பல்வேறு வழிபாட்டு நெறிகளைக் காண முடிகிறது. ஆரம்பத்தில் சூரியனுக்காகக் கட்டப்பட்ட சௌர மரபைச் சேர்ந்த தனித்துவமான அரைவட்ட வடிவம் கொண்ட துர்கா கோயில், அன்னை கௌரிக்காகக் கட்டப்பட்ட சாக்த மரபைச் சேர்ந்த கௌடர்குடி, மற்றும் மரக்கட்டிடங்களை ஒத்த அமைப்புடைய லாட்கான் கோயில் இங்கு உள்ளன. தூய சைவ மரபைக் குறிக்கும் ராவணபாடி குடைவரை, கி.பி. 634-ல் கட்டப்பட்ட மேகுடி சமணர் கோயில் மற்றும் ஒரு பௌத்த குடைவரைக் கோயிலும் இங்கு அமைந்துள்ளன. மேலும், கௌமாரம் சார்ந்த குறிப்புகளாக ஹுச்சிமல்லிகுடி கோயிலின் மேற்கூரையில் மயில் வாகனத்தில் பறக்கும் கார்த்திகேயன் (முருகன்) சிற்பமும் காணப்படுகிறது.

பட்டடக்கல்லில்: பாசுபத சைவ மரபின் உச்சமாகத் திகழும், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்மாண்டமான விருபாக்ஷா கோயில், மல்லிகார்ஜுனா கோயில், சங்கமேஸ்வரா கோயில், பாபநாதர் கோயில் மற்றும் காசிவிஸ்வநாதர் கோயில் ஆகியவை இங்குள்ளன. அத்துடன் ஒரு சமணக் கோயிலும் இங்கு அமைந்துள்ளது.

மகாக்கூடாவில்: புனித நீரூற்றைக் கொண்ட மகாக்குடேஸ்வரா மற்றும் மல்லிகார்ஜுனா கோயில்கள் தூய சைவ மரபைப் பறைசாற்றுகின்றன. சாளுக்கியர்களின் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை அதிசயங்களை நோக்கிய எங்கள் தேடல் இங்கிருந்துதான் விஸ்வரூபம் எடுத்தது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img

Latest News

பிரான்சில் அவசர கால அழைப்பு எண்கள், இலவசச் சட்ட ஆலோசனை மையங்கள் (Point Justice)

பிரான்சில் வாழும் போது எதிர்பாராத மருத்துவ அவசர நிலைகள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அல்லது சட்ட...
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More Articles Like This

- Advertisement -spot_img