Home Blog Page 64

பிரான்ஸ்: தீவுப்பகுதிகளில் வைரஸ் பரவல் தீவிரம்! மக்கள் அவதானம்!

0

பிரான்ஸ் நாட்டின் பிரதேசமாகவும், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ரீயூனியன் (Réunion) தீவில், சிக்கன்குன்யா வைரஸ் காரணமாக ஒரு பெரும் சுகாதார அவசர நிலை உருவாகியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை 33,000 பேருக்கு சிக்கன்குன்யா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவித்துள்ளன.

மரண எண்ணிக்கை:
தீவின் சுகாதார அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையின் படி, சிக்கன்குன்யா தாக்குதலால் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 30 வரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இந்த மரணங்கள் அனைத்தும் மார்ச் 6 முதல் 30 ஆம் திகதி வரையிலான குறுகிய காலப்பகுதியில் நிகழ்ந்துள்ளன என்பது வேதனைக்குரிய தகவலாகும். இது, நோய் வேகமாக பரவி உயிருக்கு ஆபத்தான கட்டத்துக்குச் சென்றுவிட்டது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

பரிசோதனைகள் மற்றும் பரவல் அளவு:
சிக்கன்குன்யா அறிகுறிகளுடன் மருத்துவமனைக்குச் சென்றவர்களில் 91,500 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 33,000 பேருக்கு சிக்கன்குன்யா உறுதியாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது, தீவின் மக்கள்தொகையில் ஒரு கணிசமான பகுதியை பாதித்துவிட்டது என்பதைக் குறிக்கிறது.

சிக்கன்குன்யா என்பது எளிதில் பரவும் வைரஸ் நோயாகும். இது பொதுவாக (அதிகமாக Aedes aegypti மற்றும் Aedes albopictus) மூலம் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகளில் திடீரென உண்டாகும் உயர் ஜுரம், கடுமையான மூட்டு வலிகள், தசைநரம்பு வலி, தலைவலி, மற்றும் தோல் பொலிவுகள் அடங்கும். சிலருக்கு நீண்டகால மூட்டு வலியாகவும் இது மாற்றம் பெறக்கூடும்.

தீவின் தற்போதைய சூழ்நிலை:
சிக்கன்குன்யா பரவலுக்கான சூழ்நிலை தற்போது ரீயூனியன் தீவில் மிக உகந்ததாக காணப்படுகிறது. அடிக்கடி பெய்யும் மழைகள் மற்றும் வெப்பத்துடன் கூடிய காலநிலை, கொசுக்கள் இனப்பெருக்கத்திற்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாக, வைரஸ் பரவல் மிக வேகமாக நடைபெற்று வருகிறது.

அரசு நடவடிக்கைகள்:
தீவின் சுகாதார அதிகாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். கொசுக்களை கட்டுப்படுத்தும் வேலைகள், தொற்றுநோய் தடுப்பு ஸ்ப்ரேவுகள், வீடுகளில் நீர் சேமிப்பு மடைகளின் தூய்மை ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கும் முன்னெச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஜுரம், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்யுமாறு வலியுறுத்தப்படுகிறது.

ரீயூனியன் தீவின் தற்போதைய சிக்கன்குன்யா நிலை பொதுமக்கள் மற்றும் சர்வதேச சமூகத்திற்கும் கவலையளிக்கும் ஒரு பரிமாணமாக மாறியுள்ளது. தொடர்ந்து உயரும் பாதிப்பு எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும், தீவின் சுகாதார அமைப்பை சவாலுக்குள்ளாக்கி வருகின்றன. இந்த பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் அரசு எடுத்துக்கொள்ளும் விரைவான நடவடிக்கைகள் மிகவும் அவசியமாகின்றன.

இலங்கையில் 2025 வரி திருத்தச் சட்டம்: புதிய மாற்றங்கள்

0

2025 ஏப்ரல் 11 அன்று, இலங்கையில் மதிப்பு கூட்டு வரி (திருத்த) சட்டம் எண் 04/2025 சான்றளிக்கப்பட்டது. 2002 ஆம் ஆண்டு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்தப் புதிய மாற்றங்கள், டிஜிட்டல் சேவைகள், உள்ளூர் உற்பத்தி, விவசாயப் பொருட்கள், மற்றும் வரி நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. இவை மக்களின் வாழ்க்கையிலும் பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். முக்கிய மாற்றங்கள் இதோ:

  1. வெளிநாட்டு டிஜிட்டல் சேவைகளுக்கு வரி
    2025 அக்டோபர் 1 முதல், வெளிநாட்டு நபர்கள் மின்னணு தளங்கள் வழியாக இலங்கையில் உள்ளவர்களுக்கு வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% மதிப்பு கூட்டு வரி விதிக்கப்படும். பதிவு, வரி செலுத்துதல், மற்றும் இணக்க நடைமுறைகளை உள்நாட்டு வருவாய் ஆணையர் பின்னர் அறிவிப்பார்.
  2. எளிமைப்படுத்தப்பட்ட வரி திட்டம் நீக்கம்
    2025 அக்டோபர் 1 முதல், எளிமைப்படுத்தப்பட்ட வரி திட்டம் நீக்கப்பட்டு, ஆபத்து அடிப்படையிலான திருப்பி செலுத்தல் திட்டம் அறிமுகமாகிறது. தகுதியுள்ள ஏற்றுமதியாளர்கள் அல்லது மூலோபாய மேம்பாட்டு திட்டங்களுக்கு 50%க்கு மேல் வழங்கல் செய்யும் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு, வரி அறிக்கை சமர்ப்பித்த 45 நாட்களுக்குள் உள்ளீட்டு வரி திருப்பி வழங்கப்படும்.
  3. வணிக இறக்குமதி/ஏற்றுமதியாளர்களுக்கு கட்டாய பதிவு
    வணிக நோக்கத்திற்காக பொருட்களை இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்யும் அனைவரும், விற்றுமுதல் வரம்பு அல்லது விலக்குகளைப் பொருட்படுத்தாமல், மதிப்பு கூட்டு வரி சட்டத்தில் பதிவு செய்ய வேண்டும்.
  4. பூஜ்ஜிய-மதிப்பு வழங்கல்கள்
    2024 ஜனவரி 1 முதல், பின்வருவன பூஜ்ஜிய-மதிப்பு வரி வகையில் உள்ளன:
  • முதலாளிகளால் ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் போக்குவரத்து (நிபந்தனைகளுடன்).
  • உள்ளூர் காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மறுகாப்பீடு ஊதியங்கள் மற்றும் வெளிநாட்டு நாணய இழப்பீடு.
  • பயன்படுத்தப்படாத அரசு அல்லது மாகாண சபை தபால்/வருவாய் முத்திரைகள்.
  1. மின்னணு வரி அறிக்கை தாக்கல்
    2025 ஜூலை 1 முதல், அனைத்து வரி அறிக்கைகளும் மின்னணு முறையில் தாக்கல் செய்யப்பட வேண்டும். கையால் தாக்கல் செய்ய ஆணையரின் அனுமதியுடன் விதிவிலக்கு சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
  2. பதப்படுத்தப்படாத விவசாயப் பொருட்களின் வரையறை
    “பதப்படுத்தப்படாத விவசாயப் பொருட்கள்” என்பது நிலத்தில் அல்லது பசுமை இல்லத்தில் வளர்க்கப்பட்ட தாவரங்களிலிருந்து உற்பத்தியாகும் பொருட்கள். இவை சுத்தம் செய்யப்பட்ட, அளவிடப்பட்ட, வரிசைப்படுத்தப்பட்ட, வெட்டப்பட்ட அல்லது குளிரூட்டப்பட்டு விற்பனைக்கு தயாரிக்கப்பட்டவையும் உள்ளடங்கும்.
  3. புதிய வரி விலக்குகள் (2025 ஏப்ரல் 11 முதல்)
  • இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தால் மின்சார வாரியத்திற்கு மின்சார உற்பத்திக்கு வழங்கப்படும் இரசாயன நாப்தா.
  • 50% உள்ளூர் பசும்பாலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் திரவ பால் மற்றும் தயிர், உள்ளூர் பால் உற்பத்தியாளர்களை ஆதரிக்க.
  1. விலக்குகள் நீக்கம் (2025 ஏப்ரல் 11 முதல்)
    விமான இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களின் இறக்குமதி, குறிப்பிட்ட சுங்க குறியீடு எண்களின் கீழ் அடையாளம் காணப்பட்டவை, இனி வரி விலக்கு பெறாது.

இந்த மாற்றங்கள் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், வரி நிர்வாகத்தை நவீனமயமாக்கவும் உருவாக்கப்பட்டுள்ளன. மேலதிக விவரங்களுக்கு, உள்நாட்டு வருவாய் திணைக்களத்தின் அறிவிப்புகளைப் பார்க்கவும்.

பரிஸிஸ்: குண்டுவெடிப்பு பீதி! போக்குவரத்து முடக்கம்!

0

பிரான்சின் தலைநகர் பரிஸ், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரம் மட்டுமல்லாது, பல்வேறு கலாசார நிகழ்வுகளுக்கும், வர்த்தகச் செயல்பாடுகளுக்கும் மையமாக விளங்குகிறது. ஆனால், அந்த நகரம் நேற்று ஏப்ரல் 16 ஆம் தேதி (புதன்கிழமை) மீண்டும் ஒரு வெடிகுண்டு எச்சரிக்கையால் பதற்ற நிலைக்கு தள்ளப்பட்டது.

மாலை நேரத்தில் பரபரப்பு ஏற்பட்ட இடம் – Champs-Elysées சாலை. இந்த பிரபல சாலையில் அமைந்துள்ள Galerie des Arcades எனும் வணிக வளாகத்தில், தரைத்தளத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு Starbucks கடையில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற தகவல் பரப்பப்பட்டதுடன், அங்கு திடீர் பதற்றம் நிலவத் தொடங்கியது.

இந்நிலையில் எச்சரிக்கை தகவல் கிடைத்தவுடன், பரிஸ் காவல்துறையும், வெடிபொருள் விசாரணை நிபுணர்களும் அவசரமாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வணிக வளாகத்தை முற்றுகையிட்டனர். உள்ளிருந்த அனைத்து கடைகளும் உடனடியாக மூடப்பட்டன. பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அவசர வெளியேற்றம் செய்யப்பட்டனர். சம்பவ இடத்தின் சுற்றிலும் இருபுற போக்குவரத்தும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.

தொடர்ந்த பல மணி நேர சோதனைக்குப் பிறகு, சம்பவ இடத்தில் எந்தவிதமான வெடிகுண்டும் இல்லையென அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாலை 5 மணிக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்ததும், பொதுமக்கள் மீண்டும் வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெடிகுண்டு இருக்கிறதென பிழையான தகவலை பரப்பிய நபரை கண்டறிந்து, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பான தனிச்சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடரும் தவறான வெடிகுண்டு எச்சரிக்கைகள்: Gare de l’Est நிலையத்திலும் பீதி
இதே நாளில், அதாவது ஏப்ரல் 16 காலை நேரத்தில், பரிஸில் உள்ள Gare de l’Est எனும் முக்கியமான தொடருந்து நிலையத்திலும் வெடிகுண்டு இருப்பதாக ஒரு பொய்யான எச்சரிக்கை பரவியது. இதனால் அங்கு சில நேரம் பரபரப்பு நிலவியது. எனினும், அங்கு எந்தவிதமான வெடிபொருளும் இல்லையென உறுதி செய்யப்பட்டது.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் – அதிகாரிகள் வேண்டுகோள்
தொடர்ந்து பரவிக்கொண்டிருக்கும் பொய்யான வெடிகுண்டு எச்சரிக்கைகள், பாதுகாப்பு அமைப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் சவாலாக மாறியுள்ளன. இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், எந்தவித சந்தேகமான நடவடிக்கையும் பார்வையில் பட்டால் உடனே காவல்துறையைத் தொடர்புகொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளில் பாரிஸ் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நகரங்களில் நடந்த தீவிரவாத தாக்குதல்களின் பின்னணி காரணமாக, குறைந்தபட்ச சந்தேகத்திற்கு கூட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் சில நேரங்களில் இவாறான போலித் தகவல்களால் தாமதமடைய நேரிட்டாலும், இது அவர்களது பாதுகாப்பிற்காகவே என்பதை மனதில் கொள்ளுமாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரான்ஸ்: காதலன் செய்த வேலை! படுக்கையிலே உயிர் துறந்த பெண்!

0

பிரான்ஸின் Champigny-sur-Marne பகுதியில் மிகக் கொடூரமான கொலைச்சம்பவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது. இதில், 42 வயதான பெண் பெரின் (Perrine) தனது வீட்டில், அவர் தினமும் உறங்கும் படுக்கையிலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெரினின் கணவராகக் கூறப்படும் ஜிம்மி (Jimmy), வயது 38. சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில், ஜிம்மியின் தந்தை, பெரினை எழுப்புவதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால், பெரின் படுக்கையில் சுயநினைவின்றி தூங்குகிறார் என நினைத்த அவர், நெருங்கிச் சென்ற போது பெரின் அசைவின்றி கிடப்பதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார். உடனே, அவர் மருத்துவ உதவியை நாடி அவசர மருத்துவ குழுவினரை அழைத்துள்ளார். மருத்துவக் குழுவினர் வந்து பரிசோதனை செய்த போது, பெரின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர், பரிசோதனைக்காக பெரினின் உடல் மருத்துவ நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் பெரினின் தலையில் ஏற்பட்டுள்ள கடுமையான காயமே அவரது மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்தது. மேலும், முகப்பகுதியில் பலத்த அடிகளும் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜிம்மி, பெரினின் மரணத்திற்கு பிறகு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், Champigny-sur-Marne காவல் துறையினர் அதே தின இரவில், மதுபோதையில் இருந்த ஜிம்மியை கைது செய்தனர். அதன் பின், அவரை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, பெரினின் முகத்தில் காலால் அடித்ததாக ஜிம்மி ஒப்புக்கொண்டுள்ளார். இது, அவரது செயலில் இருந்து கொலையை உறுதி செய்யும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

இந்தச் சம்பவம் தற்காலிக கோபத்தினாலா அல்லது குடும்பத் தகராறினாலா ஏற்பட்டது என்பதைப் பற்றி தற்போது போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் ஜிம்மிக்கும் பெரினுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்குகள், வன்முறை சம்பவங்கள் குறித்து அருகிலுள்ள உறவினர்களிடமும் நண்பர்களிடமும் விசாரிக்கப்படுகின்றது.

இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே பெரும் கலக்கம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காதல் என்பது நம்பிக்கையும் பரஸ்பர புரிந்துணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பந்தமாக இருக்கவேண்டும் என்பதையே மீண்டும் நினைவூட்டும் வகையிலும், பெண் பாதுகாப்பின் மீதான அவசியத்தையும் வலியுறுத்தும் சம்பவமாகவும் இது பார்க்கப்படுகின்றது.

பாரிஸ்: உணவகங்களில் மே தின வேலைச்சிக்கல்: அரசு சட்ட திருத்தம் அவசியம்!

0

மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினமாக இருந்தாலும், வணிகத் துறையில் காணப்படும் ஒரு முக்கியமான முரண்பாடு தற்போது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, பேக்கரிகள் போன்ற வெதுப்பகங்கள் இந்த நாளில் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அந்தக் கடைகளை நடத்தும் முதலாளிகள் மட்டும் வேலை செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர்; அவர்களது ஊழியர்களுக்கு இந்நாள் வேலைக்கான சட்ட அனுமதி இல்லை என்பதே பெரும் சிக்கலாக இருக்கிறது.

2024 ஆம் ஆண்டு வாண்டே (Vendée) பகுதியில், ஐந்து பேக்கரிகள் தங்கள் ஊழியர்களை மே 1-ஆம் தேதி வேலைக்கு அழைத்ததற்காக அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் சிக்கின. இது பேக்கரி துறையின் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பேக்கரி கூட்டமைப்புத் தலைவர் டொமினிக் அன்ராக்ட் (Dominique Anract) இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து, “பேக்கரிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மே 1-ஆம் தேதி திறந்திருப்பது வழக்கம். இது நமது கூட்டு ஒப்பந்தங்களில் கூட உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சட்டம் தெளிவில்லாமல் இருப்பதால், தொழிலாளிகளும், முதலாளிகளும் குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள்,” என தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையை சரிசெய்யும் முயற்சியாக, தொழிலாளர் விவகார அமைச்சராகிய கத்தரின் வோத்ரின் (Catherine Vautrin) மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகிய ஆஸ்ட்ரிட் பானோசியான்-பூவே (Astrid Panosyan-Bouvet) ஆகியோர் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர தயாராக உள்ளனர். இவர்களின் நோக்கம் – ஊழியர்கள் தங்களது விருப்பப்படி மே 1-ஆம் தேதி வேலை செய்ய அனுமதி பெறும் உரிமையை சட்ட ரீதியாக உறுதி செய்வது.

இந்த நடவடிக்கை, பாரம்பரியதையும் தொழிலாளர் உரிமையையும் சமநிலைப்படுத்தும் ஒரு முயற்சி எனக் கருதப்படுகிறது.

பிரான்ஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்! தீர்வுகள்!

0

ஈஸ்டர் வார இறுதி நாட்களில், பிரான்ஸ் முழுவதும் முக்கியமான நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என Bison Futé எச்சரிக்கிறது. இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணம் – Zone A பகுதிகளில் (உதாரணமாக: போர்டோ, லியோன், கிளெர்மொங்-ஃபெர்ரான்) விடுமுறைகள் துவங்குகின்றன, மற்றும் Zone B (உதாரணமாக: மார்செய், ரென்ஸ், ஸ்ட்ராஸ்பூர்க்) பகுதிகளில் விடுமுறை முடிவடைகின்றது. இதனால் மக்கள் பலரும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

முக்கிய நெரிசல் நாட்கள்:
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18)
காலை முதல் மாலை வரை அதிகமான நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது.
A1, A25, A13, A11, A63, A7 உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் கூடுதல் நெரிசல், குறிப்பாக இத்தாலி எல்லை வழியாகவும் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் கூடுதலாக இருக்கலாம்.

சனிக்கிழமை (அப்ரல் 19):
மக்கள் விடுமுறைக்கு புறப்படும் நாளாக இருப்பதால், காலை நேரம் முதல் மதியம் வரை பயணங்கள் மிகவும் மந்தமாக இருக்கும்.
திங்கட்கிழமை (அப்ரல் 21):
விடுமுறை முடிந்து மக்கள் திரும்பும் நேரம் என்பதால், மாலையில் குறிப்பாக தெற்கு-வடக்கு திசைகளில் (South to North) போக்குவரத்து சுமையாக இருக்கும்.

பயணம் நேரங்கள்:
ஞாயிற்றுக்கிழமை (அப்ரல் 20):
போக்குவரத்து மிக மிதமாக இருக்கும் அதாவது நெரிசல் சமாளிக்க கூடிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமூகமான பயணத்தை விரும்புவோருக்கு இது சிறந்த நாளாகும்.

பொதுப் போக்குவரத்து:
ரயில், மெட்ரோ மற்றும் பஸ் சேவைகள் சரிவர இயங்கும் என SNCF தெரிவித்துள்ளது. நெரிசலைத் தவிர்க்க இது ஒரு சிறந்த மாற்று வழியாகும்.

பாதுகாப்பு ஆலோசனைகள்:
👉உங்கள் பயணத்தை முன்பே திட்டமிடுங்கள் (நேரம் மற்றும் ;பயணிப்பதற்கான வழிமுறைகள்).
👉Bison Futé, Google Maps, Waze போன்ற செயலிகளை பயன்படுத்தி நேரடி போக்குவரத்து நிலவரத்தை சரிபார்க்கவும்.
👉நீண்ட பயணங்களுக்கு முன் உங்கள் வாகனத்தை சரிபார்க்கவும் – டயர் அழுத்தம், எரிபொருள் நிலை, பிரேக் நிலை போன்றவை.
👉குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயணிக்கும்போது போதிய இடைவேளைகளை எடுத்துக் கொள்ளவும்.

ஈஸ்டர் விடுமுறையை கொண்டாடும் மக்கள் பெரிதளவில் சாலை பயணங்களைத் திட்டமிட்டு உள்ளதால், நெரிசல் தவிர்க்கப்பட முடியாது. ஆனால் சீராக திட்டமிடப்பட்ட பயணம், சரியான நாளைத் தேர்ந்தெடுக்கும் விவேகம், மற்றும் பொது போக்குவரத்து போன்ற மாற்று வழிகளால் நீங்கள் உங்கள் பயணத்தை சௌகரியமாக்கலாம்.

புலம்பெயர் தமிழர்கள்: தாயகம் காலியாகிறது – கனடா நிரம்புகிறது!

வடக்கு மாகாணம், தமிழர்களின் தாயகப் பிரதேசமாகக் கருதப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் சனத்தொகை குறைந்த மாகாணமாகவும், கனடா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன், ஒரு புதிய சமூகப் பரிமாணத்தை உருவாக்கியுள்ளதையும் பிரதிபலிக்கிறது.

2024 கணக்கெடுப்பு மூலம் வெளியான முக்கிய விபரங்கள்
2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின் படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகப் பதிவாகியுள்ளது.
இதில்:
👉மேல் மாகாணம் 28.1% சதவீதத்துடன் அதிக சனத்தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது.
👉வடக்கு மாகாணம் 5.3% சதவீதம் மட்டுமே கொண்டதாக, சனத்தொகை குறைந்த மாகாணமாக பதிவாகியுள்ளது.
👉முல்லைத்தீவு மாவட்டம் – ஒரு சதுர கிலோமீட்டருக்கு வெறும் 50 நபர்களே வசிக்கின்றனர்.
👉கொழும்பு மாவட்டத்தில் இது 3,549 நபர்கள் ஆக உயர்ந்துள்ளது.
👉கம்பஹா மாவட்டம் 24,34,000 மக்கள் தொகையுடன் நாடில் அதிக மக்கள் உள்ள மாவட்டமாக இருக்கிறது.

வடக்கு மாகாணத்தின் சனத்தொகை விரிவான விபரங்கள்

மாவட்டம்சனத்தொகைஆண்டு வளர்ச்சி விகிதம்
முல்லைத்தீவு1,23,0002.23%
மன்னார்1,24,000
கிளிநொச்சி1,36,000
வவுனியா1,72,0000.01%

இடம்பெயர்வும் உலகத் தமிழர் பரவலும்
இலங்கையின் வடக்கிலிருந்து பெருமளவில் மக்கள் வெளியேறியுள்ளனர். குறிப்பாக:
👉கனடாவில் தற்போது 2.4 முதல் 3 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.
👉1983இல் வெறும் 150 பேர் மட்டுமே இருந்த நிலையில்,
👉2021இல் 1,40,000 பேர் கனடாவில் பிறந்துள்ளனர்.
👉பிரித்தானியா – 2 லட்சம் தமிழர்கள்
👉ஐரோப்பா, ஸ்காண்டிநேவியன் நாடுகள், அவுஸ்திரேலியா – மொத்தமாக 2 லட்சம் மக்கள்
👉இந்தியா – 1.5 லட்சம் தமிழர்கள்

தமிழர்களின் பரவல் – பன்முக சமூக அமைப்பாக மாறியமை
இப்போது உலகிலுள்ள இலங்கைத் தமிழர்கள் மூன்றாகப் பிரிக்கப்படலாம்:
மூன்றில் ஒரு பகுதி – வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர்
மூன்றில் ஒரு பகுதி – தென்பகுதிகளில், நாட்டிற்குள் சிதறி வாழ்கின்றனர்
மூன்றில் ஒரு பகுதி – இலங்கைக்கு வெளியே, பெரும்பாலும் மேற்கு நாடுகளில் வசிக்கின்றனர்

யுத்தம் முடிவடைந்தது ஒரு திருப்புமுனை
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையாதிருந்தால்:
தமிழர்களின் பெரும் இடம்பெயர்வு தொடர்ந்திருக்கும்
வடக்கு கிழக்கு மக்கள் இலவசமான பிரதேசங்களாக மாறியிருக்கும்

2004இல் “தேசம்” சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரை, “சமாதானத்தின் அவசியம்” என்பதைக் கூறி, தொடர்ந்து யுத்தம் இடம்பெற்றால் தமிழர்கள் நாடு முழுவதும் அல்லது வெளிநாடுகளுக்கே முற்றாக இடம்பெயர்வர் எனக் கணித்திருந்தது
இன்று வடக்கு மாகாணம் மக்கள்தொகை குறைவாக இருப்பது, யுத்தம், இடம்பெயர்வு, வசதிகளின் பற்றாக்குறை போன்ற காரணிகளால் விளைந்த நீண்டகால சமூக விளைவாக பார்க்கப்பட வேண்டும். புதிய கணக்கெடுப்புகள், உலகத் தமிழர்களின் பரவல், மற்றும் சமாதானத்தின் மதிப்பு ஆகியவற்றை இணைத்து நம்மால் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க முடியும்.

அமெரிக்காவின் வரி: இலங்கையின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்!

இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்கள்மீது 44% வரி விதித்துள்ளது. இது, இலங்கையின் முக்கியமான ஏற்றுமதி சந்தையாக இருப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த வர்த்தக வருவாயில் அமெரிக்காவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதைப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட இந்த திடீர் நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவில் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இலங்கை தனது மொத்த ஏற்றுமதியின் சுமார் 23% ஐ அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. இதில், ஆடைத் துறை மட்டும் 70% க்கும் அதிகமாக பங்களித்து, சுமார் 3 பில்லியன் டொலர் வருமானத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் 44% வரி உயர்வு, குறிப்பாக ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. விலை அதிகரிப்பால், அமெரிக்க சந்தையில் இலங்கையின் பொருட்கள் போட்டித் திறனை இழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால், ஏற்றுமதி குறையும்; தொடர்ச்சியாக, நாட்டின் வெளிநாட்டு நாணய வருமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிக வரி சுமையால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படலாம். இது வேலை இழப்புகளும் தொழில் நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படுத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே நெருக்கடியான பொருளாதார சூழலில் தவித்து வரும் இலங்கைக்கு இது மேலும் அழுத்தத்தை உருவாக்கும் எனவும் கருதப்படுகிறது.

இந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இலங்கை அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அமெரிக்க அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும, சர்வதேச நாணய நிதியமும் (IMF) இந்த நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில் ஆழ்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.

எதிர்காலத்தில் இந்த பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா? அல்லது இலங்கை பொருளாதாரம் மேலும் சிக்கலுக்கு உள்ளாகுமா? என்பதை காலமே நிர்ணயிக்க வேண்டும். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளைத் தேடுவது மற்றும் உற்பத்தி செலவுகளை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.

பிரான்ஸ் குடியுரிமை மறுப்பு !இது ஒரு காரணமா?

0

தோட்டத்தில் சத்தமாக இயந்திரங்களை பயன்படுத்தி புல் வெட்டியா காரணத்தால் குறியுரிமை மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்த 50 வயது பிரான்ஸ் நாட்டவரின் குடியுரிமை விண்ணப்பம், சத்தமாக புல் வெட்டியதாகவும், சுவிஸ் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகவில்லை எனவும் கூறி நிராகரிக்கப்பட்டது.

அந்த நபர் வார இறுதி நாட்களில் தோட்டத்தில் இயந்திரம் மூலம் புல் வெட்டுவதால் அயலில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவரது வீடு நீண்டநாளாகப் புதுப்பிப்பில் இருப்பதாலும், சுற்றிலும் குப்பைகள் குவிவதாலும் அவர் ஒரு “நல்ல குடிமகன்” இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் தேவையான மொழிப் பயன்பாடு மற்றும் குடியுரிமைக்கான பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளார் என உறுதிப்படுத்தி, அவரது குடியுரிமை விண்ணப்ப நிராகரிப்பை ரத்து செய்தது.

இருப்பினும், அயலில் வசிப்பவர்களுக்கு இடையூறான செயற்பாடுகள் குறித்து அவர் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் இனி சத்தம் குறைந்த முறையில் தோட்டப்பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தி, அவருக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்தது.

கனடா: மவுசு கூடிய கனேடிய பல்கலைக்கழகங்கள்! அப்படி என்னதான் இருக்கு?

0

அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்கள், இப்போது அதிக அளவில் தமது மேற்படிப்புக்காக கனடாவின் பல்கலைக்கழகங்களை நாடுகின்றார்கள் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்ணப்பங்களில் 27% உயர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கல்விக் கொள்கைகள் குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் பெடரல் நிதி குறைப்பும், வெளிநாட்டு மாணவர்களின் விசா அனுமதிகளில் கடுமை ஏற்படுத்தியதுமே – இந்த மாற்றத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.

வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (UBC) தெரிவித்ததின்படி, 2025 கல்வியாண்டுக்கான பட்டதாரி படிப்புகளுக்கான அமெரிக்க விண்ணப்பங்கள், 2024-இல் இருந்ததைவிட 27 சதவிகிதம் அதிகமாக உள்ளன.

அமெரிக்க மாணவர்களை தக்க வைக்கும் முயற்சிகள்
செப்டம்பர் மாதம் தொடங்கும் படிப்புகளுக்காக, அமெரிக்க மாணவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை விரைவில் செயலாக்கும் திட்டத்துடன், வான்கூவர் வளாகம் மீண்டும் பட்டதாரி சேர்க்கைகளைத் துவங்கியுள்ளது.

அதிகமான விண்ணப்பங்கள் பெற்ற பல்கலைக்கழகங்கள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் கனடாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருக்கின்றது. 2025 கல்வியாண்டிற்கான ஜனவரி காலக்கெடுவுக்குள், இது அமெரிக்க விண்ணப்பங்களை அதிகமாகப் பெற்றுள்ளது. அதேபோல், வாட்டர்லூ பல்கலைக்கழகமும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளது.

இவ்வாறு மாணவர்களை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு என்ன காரணமென ரொறன்ரோ மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழகங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தாத நிலையில், வான்கூவர் வளாகம் மட்டும் ட்ரம்பின் கல்விக் கொள்கைகளே முக்கிய காரணம் என தெளிவாக கூறியுள்ளது.

நாடுகடத்தல் மற்றும் விசா ரத்து நடவடிக்கைகள்
ட்ரம்ப் நிர்வாகம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலரைக் குறைத்து, யூத எதிர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி, பல்கலைக்கழகங்களை கொள்கை மாற்றத்துக்குத் ஆளாகியுள்ளது.

மேலும், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற சில வெளிநாட்டு மாணவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கான நாடுகடத்தல் நடவடிக்கையும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், நூற்றுக்கணக்கான மாணவர்கள் விசா ரத்தாகி அமெரிக்காவில் செய்வதறியாது தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவின் புதிய வரம்புகள்
ஒரு புறம் அமெரிக்காவில் நிலவும் ஒடுக்குமுறைகள் காரணமாக மாணவர்கள் கனடாவை நாடி வருகிறார்கள் என்றாலும், கனடா தனது சர்வதேச மாணவர் எண்ணிக்கையை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கட்டுப்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் மாணவர்களுக்கு உள்ள இடங்கள் குறைந்துவிட்டது. எதிர்காலத்தில் சர்வதேச மாணவர்களுக்கு நுழைவுத் தடை அல்லது இட வசதியில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.